காதலர் தினம்-சிவப்பு ரோஜாவுக்கு செளதி தடை
துபாய்: காதலர் தினத்தையொட்டி சிவப்பு ரோஜாக்களை விற்பனை செய்வதற்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. காதலர் தினம் தொடர்பான பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரித்துள்ளது.
காதல் என்பது தவறான உறவுகளுக்கும், தொடர்புகளுக்கும், திருமணத்திற்கு முந்தைய உடலுறவுக்கும் வழி வகுக்கும் என்பது சவூதி அரேபிய அரசின் கருத்து. இதனால் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு அங்கு அனுமதி இல்லை.
இந் நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு தடைகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி காதலின் அன்பு பகிர்மானமாக கொடுக்கப்படும் சிவப்பு ரோஜாக்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பூக்கடைகளுக்கு காவல்துறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சிவப்பு ரோஜாக்களை விற்கக் கூடாது. விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
காதலர் தினம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது, தவறான உறவுகளுக்கு இது வழிவகுக்கும் என்பதால் காதலர் தினம் தொடர்பான அனைத்துக் கொண்டாட்டங்களும், பரிசுகளும் தடை செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.