மேற்கு வங்க காங். தலைவர் தாஸ்முன்ஷி
டெல்லி: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநில சட்டசபைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சி நிர்வாகிகள் சிலரை மாற்றியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலை சந்திக்கவுள்ள ஜம்மு காஷ்மர் மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் பேராசிரியர் சைபுதீன் சோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கின் மகன் அஜய் சிங், மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாஸ்முன்ஷி தற்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறையைக் கவனித்து வருகிறார். அதில் ஒன்றை அவர் விட்டு விடுவார் எனத் தெரிகிறது. அதேபோல சுரேஷ் பச்சோரியும் தன்னிடம் உள்ள துறைகளில் ஒன்றை விடுவார்.
சைபுதீன் சோஸ், நீர்வளத்துறையை மட்டும் வைத்திருப்பதால் தொடர்ந்து அப்பொறுப்பில் அவர் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருந்து வந்தார். அவருக்குப் பதில் தாஸ்முன்ஷிக்கு தலைவர் பொறுப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே 1985 முதல் 1988 வரை காங்கிரஸ் தலைவராக முன்ஷி இருந்துள்ளார். நான்கு ஆண்டுகள் தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.