'காதல் செய்வீர்'-மார்க்சிஸ்ட்; 'அலையாதீர்'-சிவசேனா!
கும்பகோணம்: காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கும்பகோணத்தில் ஆண், பெண் நாய்களின் கழுத்தில் காதலர் தினம் என்ற சிலேட்டை மாட்டி, வாயில் ரோஜாப் பூக்களை சொருகி ஊர்வலமாக அழைத்துச் சென்று நூதனப் போராட்டம் நடந்தது.
இன்று உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் உற்சாகம் பொங்கிப் பெருகி வரும் நிலையில், இந்தியாவில், பல இந்து அமைப்புகள் காதலர் தினத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தின.
தமிழகத்திலும் ஆங்காங்கே எதிர்ப்புகள் காணப்பட்டன. கும்பகோணத்தில் படு நூதனமாக ஒரு போராட்டம் நடந்தது. சிலர் கூடி, ஒரு ஆண் நாயையும், ஒரு பெண் நாயையும் கூட்டி வந்து, அதன் கழுத்தில் காதலர் தினம் - பிப்ரவரி 14 என்று எழுதப்பட்ட சிலேட்டை மாட்டினர்.
பின்னர் ஆளுக்கு ஒரு ரோஜாப் பூவை நாய் வாயில் வைத்தனர். பின்னர் அதை ஊர்வலமாக அழைத்துச் சென்று காதலர் தினத்துக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
மதுரையில் காதலர் தினத்தை எதிர்த்து நகர் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் ரயில் நிலையம் அருகே காதலர் தின எதிர்ப்புக் கொடும்பாவியையும் எரிக்க முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
சிவசேனா கட்சியினர் கைது:
இதற்கிடையே திருநெல்வேலியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த சிவசேனா கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் ஜாதி, மதம் கடந்து காதல் செய்வீர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தினர் சுவரொட்டிகள் ஒட்டினர்.
ஆனால், நாய்களைப் போல அலையாதீர் என்று போட்டிக்கு சிவசேனா கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.
சிவசேனாவின் இந்த போஸ்டர்கள் மிகக் காட்டமாக இருப்பதாக காதலை ஏற்போரும், எதிர்ப்போரும் கண்டித்தனர். காதலிப்போரை நாய்களாய் அலையாதீர் என்று சொல்ல சிவசேனாவுக்கு என்ன உரிமை உள்ளது என இந்திய மாணவர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந் நிலையில் சிவசேனா கட்சி மாநில தலைவர் செல்வம், மாவட்டத் தலைவர் முத்தையா ஆகியோர் தலைமையில் 8 பேர் நெல்லை ஜங்ஷனில் கூடி காதலர் தினத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.