காதலர் தினத்தில் காதலனுடன் நர்ஸ் ஓட்டம்!
சென்னை: காதலர் தினமான நேற்று காதலனுடன் நர்ஸ் வீட்டை விட்டு ஓடி விட்டார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி லதா. இவர்களது மகள் சரஸ்வதி (வயது 20). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
சரஸ்வதி, அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமாரைக் காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 4 வருடங்களாக இது நீடித்தது. சந்தோஷ் கார்பென்டர் ஆவார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடினர். அப்போது இருவரையும் போலீஸார் தேடிக் கண்டுபிடித்தனர். அந்த சமயத்தில் சரஸ்வதிக்கு 18 வயது ஆகவில்லை. இதையடுத்து அவரை பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
இருந்தாலும் தங்களது காதலை விடாமல் தொடர்ந்துள்ளனர் சந்தோஷும், சரஸ்வதியும். தற்போது சரஸ்வதிக்கு 20 வயது ஆகிறது. இப்போது சந்தோஷ் குமாரை மணக்க எந்தத் தடையும் இல்லை என்று முடிவு செய்தார் சரஸ்வதி. ஆனால் காதலை அங்கீகரிக்க பெற்றோர் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில், காதலர் தினமான நேற்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதுகுறித்து சரஸ்வதியின் பெற்றோர் போலீஸில் புகார் செய்துள்ளனர். போலீஸாரும் அவர்களைத் தேடி வருகின்றனர்.