Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரிஸ்ஸாவில் நக்ஸல்கள் பயங்கர தாக்குதல்-14 போலீசார் பலி

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒரிஸ்ஸாவில் நக்ஸலைட்டுகள் தாக்கி 14 போலீசார் பலியாயினர். போலீஸ் ஆயுதக் கிடங்கு சூறையாடப்பட்டு, ஏராளமான ஆயுதங்களை நக்ஸல்கள் அள்ளிச் சென்றுவிட்டனர்.

நயாகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி, 2 காவல் நிலையங்கள், போலீஸ் ஆயுதக் கிடங்கு ஆகியவற்றின் மீது நேற்றிரவு ஒரே நேரத்தில் நக்ஸலைட்டுகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

நக்ஸல்கள் நடத்திய இந்த திடீர் தாக்குதல், துப்பாக்கிச் சூட்டில் 14 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய இடங்களில் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், குண்டுகள், வாக்கி டாக்கிகளை நக்ஸலைட்டுகள் அள்ளிச் சென்றுவிட்டனர்.

காட்டுப் பகுதிக்குள் தப்பியோடும் முன் தாஸபாலா காவல் நிலையத்துக்கு நக்ஸல்கள் தீ வைத்தனர். இதில் அந்த காவல் நிலையம் அடியோடு எரிந்து நாசமானது.

இந்தத் தாக்குதல்களை நடத்தியபோது, பொது மக்கள் யாரையும் எதுவும் செய்ய மாட்டோம். எனவே யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று 'மைக்' மூலம் நக்ஸலைட்டுகள் அறிவித்தனர். இதனால் யாரும் வெளியே வரவில்லை.

முதலில் குண்டுகளை வீசி போலீசாரை நிலை குலைய வைத்துவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி ஆயுதங்களை அள்ளிச் சென்றுள்ளனர் நக்ஸல்கள்.

போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியும் பலனில்லை. நக்சலைட்டுகள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாக்குதல் நடத்தினர் நக்ஸல்கள்.

நக்சலைட்டுக்கள் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. பலியானவர்கள் உடல்களை நக்சலைட்டுகள் தூக்கி சென்று விட்டனர்.

ஆயுதக் கிடங்கில் இருந்த நவீன துப்பாக்கிகள், வெடிப் பொருட்களை மூட்டைகளில் கட்டி எடுத்துச் சென்றனர்.

ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை காட்டுப் பகுதி வரை கொண்டு செல்ல ஒரு அரசு பஸ்ஸையும் அவர்கள் கடத்தியுள்ளனர். அவர்கள் வாக்கி டாக்கிகளையும் எடுத்துச் சென்றதால் போலீசாரின் நடமாட்டத்தையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டே தப்பியுள்ளனர்.

இந்த நக்சலைட்டுகள் ஆந்திரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து ஊடுருவி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆந்திரா-ஒரிஸ்ஸா மாநில சி.பி.ஐ. (மாவோயிஸ்ட் பிரிவு) செயலாளர் சப்யசாஷி பாண்டாவின் தலைமையில் நக்ஸல்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

ஒரிஸ்ஸாவில் நக்ஸலைட்டுக்கள் நடத்தியுள்ள 2வது மிகப்பெரிய தாக்குதல் இது. 2006ம் ஆண்டு மார்ச் மாதம் உதயகிரி பகுதியில் சுமார் 500 நக்சலைட்டுக்கள் அதிரடி தாக்குதல் நடத்தி போலீசாரிடம் ஆயுதங்களை கொள்ளையடித்தனர். மேலும் சிறையையும் தகர்த்து அங்கிருந்த 40 நக்ஸல் கைதிகளையும் விடுவித்து கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் ஏராளமான பெண் நக்ஸலைட்டுக்களும் பங்கேற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+