எஸ்.சி.வி. ஆபரேட்டர்கள் கைது-போலீஸ் மீது தயாநிதி மாறன் புகார்

இன்று காலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தயாநிதி மாறன் வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆணையர் அலுவலகத்திற்குள் சென்று புகார் மனுவைக் கொடுத்து விட்டு வெளியே வந்த தயாநிதி மாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் எஸ்.சி.வி.யின் கட்டமைப்புக்குள் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை போலீஸார் எந்தவிதக் காரணமும் இன்றிக் கைது செய்து வருகின்றனர்.
நேற்று தென் சென்னையில் மட்டும் 25 பேரைக் கைது செய்துள்ளனர். இரவு நேரங்களில் வீடு வீடாகப் போய் கைது செய்கிறார்கள்.
இந்த கைது நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது என்று நம்புகிறேன். ஒரு வேளை இது அவருக்குத் தெரிய வந்தால், கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது அவர் கடும் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ளது என்றார் தயாநிதி மாறன்.
தயாநிதி மாறனின் இந்தப் புகார் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவிக்கும், கலைஞர் டிவிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக சமீபத்தில் சன் டைரக்ட் டிடிஎச் சேவையை சன் டிவி அறிமுகப்படுத்தியது.
இந் சேவையில் பல சலுகைகளையும் அது அறிவித்தது. இந்த நிலையில், எஸ்சிவியின் கீழ் வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்களை போலீஸார் கைது செய்வதாக தயாநிதி மாறன் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications