காங். கூட்டணிக்கு விஜய்காந்த் தயார்?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளித்துள்ள பேட்டி:
சிறிய வயதிலேயே என்னை கவர்ந்த இயக்கம், காங்கிரஸ். இந்திராகாந்தியை பார்க்க சின்ன வயதில் அப்பாவோடு செல்வேன். இந்திரா காந்தி என் கையை பிடித்து குலுக்கியதை மறக்க முடியாது.
தேசிய கட்சிகளில் காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் பெரிய மரியாதை இருக்கிறது. அந்த கட்சியோடு நான் கூட்டணி அமைப்பேனா என்பதை காலமும், சூழ்நிலையும்தான் முடிவு செய்யும்.
என் மீது அன்பு கொண்டவர்கள் என் எதிர்கால வளர்ச்சியில் அக்கறை காட்டுபவர்கள் காங்கிரசோடு கூட்டணி சேர்ந்தால், அது இயற்கையான கூட்டணியாக இருக்கும். தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். அது பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன்.
காங்கிரசை சேர்ந்தவர்களும் டெல்லியில் பல கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட்டணி தொடர்பாக எங்கள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
காங்கிரசில் உள்ள பலர் என்னோடு நட்புடன் இருக்கிறார்கள். ஜி.கே.வாசன், சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், இளங்கோவன், குமரிஅனந்தன் ஆகியோர் என்னுடன் தொடர்ந்து பல விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நட்புரீதியிலான இந்த பேச்சு வேறு, கூட்டணி பேச்சு வேறு. கூட்டணி என்பது உரிய முறையில் உரிய நேரத்தில் பேசி முடிக்க வேண்டும்.
காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமாருடன் முக்கியமான சில விஷயங்களை பேசியது உண்மைதான். என்னுடன் பேசிய விபரங்களை சொல்ல வேண்டிய நேரத்தில்தான் சொல்வேன் என்று அவரே கூறிவிட்டார். அதற்குள் நான் முந்தி கொள்வது அரசியல் ஆரோக்கியம் அல்ல.
தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பற்றி நான் தொண்டர்களிடம் கருத்து கேட்கிறேன். பல தொண்டர்கள் தங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் பொதுக்கூட்டங்களில் கேட்டு வருகிறேன். இது பல தலைவர்கள் கையாண்ட முறைதான்.
மக்கள் ஆதரவோடு டெல்லியை நான் கலக்கும் நேரம் வந்தால் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு உள்பட தமிழ்நாட்டு பிரச்சினைகளை கையில் எடுப்பேன். அதற்காக போராடுவேன். மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் வாழப்பாடியார் வழியில் நானோ, என் கட்சிக்காரர்களோ பதவியை தூக்கி வீசி விட்டு வருவோம் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறி வந்தவர் விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தான் தேசியக் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருவதாக முதல் முறையாகக் கூறியுள்ளார்.
மா.செக்களுடன் இன்று ஆலோசனை-கூட்டணிக்கு ஆதரவு:
இந் நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே. சுதிஷ் (இவர் கேப்டனின் மச்சான்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் கருத்து கேட்டார். மக்கள் மனநிலை என்ன என்பது குறித்துக் கேட்டார்.
அப்போது காங்கிரசுடன் கூட்டணி வைக்கலாம் என அனைத்து மாவட்டச் செயலாளர்களுமே கூறியதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்திற்கு பத்திரிக்கை நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை. புகைப்படம் எடுக்க மட்டும அனுமதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து மகளிர் அணி கூட்டம் நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் அவரது மனைவி பிரேமலதா, மாநில மகளிர் அணி செயலாளர் ரொஜினா பாப்பா, துணை செயலாளர்கள் லைலா காதர்பாஷா, சிவகாமி முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.