மலேசியாவில் மீண்டும் தமிழர்கள் போராட்டம்

சிறுபான்மை தமிழர்களுக்கு, பெரும்பான்மை மலேயர்களுக்கு வழங்கப்படுவது போன்ற உரிமைகளை வழங்கக் கோரி நாடாளுமன்றம் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்போவதாக ஹிண்ட்ராப் அமைப்பு அறிவித்திருந்தது.
ஆனால் இந்தப் போராட்டத்திற்கு அரசு அனுமதி தரவில்லை. தடை விதித்தது. ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என ஹிண்ட்ராப் அமைப்பு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு ஹிண்ட்ராப் அமைப்பின் 5 வயது மகள் வைஷ்ணவி தலைமையில் ஏராளமான சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட தமிழர்கள் கூடினர். 200க்கும் மேற்பட்டோர் கூடி நாடாளுமன்றத்தின் முன்பு கூடி சிறுபான்மையினருக்கு உரிமைகள் தரக் கோரி கோஷமிட்டனர்.
பிரதமர் அப்துல்லா படாவியை சந்தித்து ரோஜாப் பூக்களைக் கொடுக்கப் போவதாக வைஷ்ணவி கூறினார். கடந்த மாதம் இதுகுறித்து அவர் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியிருந்தார். காதலர் தினத்தையொட்டி, தமிழர்களின் அன்பைத் தெரிவிக்கும் வகையில் ரோஜாக்களைக் கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இருப்பினும் இதற்கு அரசு அனுமதி தரவில்லை. இந்த நிலையில் இன்று தடையை மீறி கூடிய தமிழர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், ரசாயானத் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கலைத்தனர். பின்னர் ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த 20 பேரை கைது செய்தனர்.
இருப்பினும் போராட்டத்தையொட்டி நேற்று இரவு முதல் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிண்ட்ராப் உறுப்பினரும், வழக்கறிஞருமான சுரேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்து தூதரகம் நோக்கி ஹிண்ட்ராப் அமைப்பினர் ஊர்வலம் நடத்த முயன்றபோதும் இதேபோலத்தான் போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் 2வது முறையாக ஹிண்ட்ராப் அமைப்பு நடத்திய போராட்டமும் கலைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications