ஆற்றில் கவிந்த பஸ்-49 பேர் காயம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சின்னக்காளிப்பட்டி என்ற இடத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து 49 பேர் காயமடைந்தனர்.
கும்பகோணத்திலிருந்து இன்று காலை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் சின்னக்காளிப்பட்டி என்ற இடத்தில் தென்பென்னையாறு பாலம் மீது பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் பாலச் சுவரை இடித்துத் தள்ளி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
வறண்டு கிடந்த ஆற்றுக்குள், 25 அடி உயரத்திலிருந்து பேருந்து விழுந்ததில் டிரைவர் உள்பட 49 பேர் காயமடைந்தனர். பேருந்தில் மொத்தம் 65 பேர் இருந்தனர்.
டிரைவரும், கண்டக்டரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உள்பட 37 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 7 பேர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கும், 5 பேர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.