தர்மபுரி நகஸல் தாக்குதல் நாடகமா?-போலீசார் மீதே சந்தேகம்: துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையில் நக்ஸல்களால் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட துப்பாக்கிகள், காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள வாழைத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு புகுந்த ஒரு கும்பல் அங்கு வைக்கப்பட்டிருந்த 6 துப்பாக்கிகள், வாக்கி டாக்கி ஆகியவற்றை அள்ளிச் சென்றதாக கூறப்பட்டது. அப்போது காவல் பணியில் இருந்த ஒரே காவலர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், மற்றவர்கள் வெளியில் போயிருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்தத் தாக்குதல் நடத்தியது நக்ஸலைட்டுகள் என்று கருதப்பட்டது.
இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக 4 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய 18 பேரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 போலீஸாருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. கூடுதல் டிஜிபி விஜயக்குமாரும் நேரில் போய் விசாரணை நடத்தினார்.
கொள்ளை போன துப்பாக்கிகளும், வாக்கி டாக்கியும் கிணறுகளில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் கிணறுகளில் சோதனையிட்டனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள வயல் வெளிகளிலும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந் நிலையில் காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள, ரங்கநாதன் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில் வாழை மட்டைகளைக் குவித்துப் போட்டு அதற்குக் கீழே துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
காவல் நிலையத்தில் கொள்ளை போனவற்றில் 5 துப்பாக்கிகள் அங்கு கிடந்தன. வாக்கி டாக்கியும், எஸ்.பி.டி.எல். ரக நாட்டுத் துப்பாக்கியும் காணவில்லை. மேலும் சிக்கிய ஐந்து துப்பாக்கிகளில் ஒரு துப்பாக்கியின் முனையில் இருக்கும் கத்தி (பேனட்) காணவில்லை.
துப்பாக்கிகள் கிடைத்த தகவல் கிடைத்ததும் டிஐஜி செண்பகராமன், எஸ்.பி. நஜ்மூல் கோடா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். கூடுதல் டிஜிபி விஜயக்குமாருக்கும் தகவல் தரப்பட்டுள்ளது. அவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
காவல் நிலையத்திற்குப் பின்பே துப்பாக்கிகள் சிக்கியுள்ளதால் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸார் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.
போலீஸார்தான் இதற்குப் பின்னணியில் இருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது.
போலீஸாருக்குள் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம், அதிகாரிகள் சிலருடன் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அதற்குப் பழி வாங்கும் வகையில் நகஸல்கள் தாக்குதல் நடத்தியதாக நாடகத்தை நடத்தியிருக்கலாம் என உயர் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனால் துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவத்தில் நக்சலைட்டுகளுக்கு சம்பந்தம் இல்லை என்றும் போலீஸார் உறுதியாக கூறுகின்றனர்.
காணாமல் போன துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து டிஜிபி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தகவல் முதல்வர் கருணாநிதிக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவர் பாராட்டு தெரிவித்தார். தன்னுடன் வேலூர் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த கூடுதல் டிஜிபி விஜயக்குமாரை அழைத்து உடனடியாக அதியமான் கோட்டை செல்ல உத்தரவிட்டார். அதன்படி விஜயக்குமாரும் அதியமான் கோட்டைக்கு விரைந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், இச்சம்பவத்தில், நக்சலைட் தீவிரவாதிகள் தொடர்பான ஆதாரம் எதுவும் தெரிய வரவில்லை. மேலும் விசாரணையில், இச்சம்பவம் காவல்துறையினரின் மீது களங்கத்தை ஏற்படுத்த காவல் துறையினரால், பாதிக்கப்பட்டவர்கள் செய்திருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது.
தனிப்படையினர் காணாமல் போன மற்றொரு துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கியை கண்டுபிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications