ஆபாச செய்கை-இந்திய மாணவர் கைது
லண்டன்: சாலையில் சென்ற பெண்ணை வழிமறித்து ஆபாச செய்கை காட்டி அதிர்ச்சியூட்டிய இந்திய மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த அமித் சிவ்ரெய்ன் (26), நியூகேஸில் நகரில் சட்டம் படித்து வருகிறார். மாணவர் விசாவில் இங்கிலாந்துக்கு படிக்க வந்திருக்கிறார் அமித்.
இவர் நியூகேஸில் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணை மறித்து மணி என்ன என்று கேட்டுள்ளார். அவர் கைக்கடிகாரம் கட்டவில்லை. இதையடுத்து தனது செல்போனில் மணி பார்த்துச் சொல்வதற்காக ஆப் செய்திருந்த செல்போனை ஆன் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதாவிதமாக அமித் திடீரென தனது உடையை களைந்து ஆபா செய்கையை காட்டி அப்பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பதறிப் போன அவர் அங்கிருந்து விரைவாக நகர்ந்தார். பின்னர் தனது அலுவலகத்திற்குச் சென்ற அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார்.
விரைந்து வந்த போலீஸார் மாணவர் அமித்தைக் கைது செய்தனர். அவரை அப்பெண் அடையாளம் காட்டினார். இதையடுத்து அமித் மீது நியூகேஸில் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமித்துக்கு 4 மாத சிறைத் தண்டனை விதித்தது. மேலும் அவரது பெயரை செக்ஸ் குற்றவாளிகள் பட்டியலில் 7 ஆண்டுகள் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைத் தண்டனைக்குப் பின்னர் அமித் நாடு கடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
அமித்தின் வழக்கறிஞர் கிரேக் ஸ்டீபன்ஸ் கூறுகையில், சில நொடி முட்டாள்தனத்தால் அமித்தின் வாழ்க்கை வீணாகி விட்டது. இனிமேல் இங்கிலாந்தில் அவர் படிக்க முடியாது. நல்ல மாணவராகிய அவர் முட்டாள்தனமான செய்கையால் வாழ்க்கையை இழந்துள்ளார் என்றார் வருத்தத்துடன்