நாளை பாகிஸ்தானில் தேர்தல்-பீதி கலந்த எதிர்பார்ப்பு
இஸ்லாமாபாத்:
பெரும் பரபரப்பான சூழ்நிலையில் நாளை பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தல் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் பெரும் பீதியும் நிலவுகிறது.
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் ஜனவரி 8ம் தேதி முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிப்ரவரி 18ம் தேதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறும் என பரவலாக நம்பப்படுகிறது.
முறையாக தேர்தல் நடந்தால் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஷ் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சியும் பெரும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்திற்கும், நான்கு மாகாண சட்டசபைகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரசாரம் ஓய்ந்தது
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் பாகிஸ்தானில் ஓய்ந்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இறுதிக் கட்ட பிரசாரத்தில், அக்கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி கலந்து கொண்டு பேசினார்.
லாகூரில் நடந்த அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் அதை நவாஸ் ஷெரீப் கட்சியினரோடு சேர்ந்து முறியடிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
பொது பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளதால், வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். டிவி மூலமும் விளம்பரம் சூடுபிடித்துள்ளது.