சானியா, சச்சின், ஷாருக் ஸ்டாம்ப் வெளியிட அரசு முடிவு
டெல்லி: விளையாட்டு புயல்கள் சானியா மிர்ஸா, சச்சின் டெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் உள்ளிட்டோரின் தபால் தலைகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் தபால்துறை மறைந்த தலைவர்கள், முக்கிய இடங்கள், ஊர்கள், விசேஷ சூழ்நிலைகள் போன்றவற்றுக்குத்தான் தபால் தலைகள் வெளியிடுவது வழக்கம்.
இந்த நிலையில் இதிலிருந்து மாறுபட்டு புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோரின் உருவப் படங்கள் அடங்கிய தபால் தலைகளை வெளியிட மத்திய தபால் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது கூறுகையில், கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, நடிகர் ஷாருக்கான், ரெமோ பெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலங்களின் தபால் தலைகளை வெளியிடுவது குறித்து தபால்துறை யோசித்து வருகிறது.
இந்தத் தபால் தலைகளை அவர்களின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் அதிக அளவில் வாங்குவார்கள். மேலும் தபால் தலைகள் சேகரிக்கும் பழக்கத்தையும் இதன் மூலம் ஊக்கப்படுத்த முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications