விஸ்வரூபம் எடுக்கும் மதுரை சுடுகாட்டு பிரச்சனை
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் உள்ள சுடுகாடு தொடர்பான பிரச்சனை வலுத்துள்ளது. இதுதொடர்பாக நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
மதுரை சம்பக்குளம் பொது மக்களுக்கு உரிய சுடுகாடு மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் புதூர் செல்லும் சாலையில் உள்ளது.
இந்த இடத்திற்கு எதிரில் ஒரு வணிக வாளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த பகுதியில் சில தினங்களுக்கு முன்பு ஒருவர் இறந்தார். அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு வந்து தகனம் செய்ய முயன்றனர். ஆனால் அதை அனுமதிக்காமல் மாநகராட்சி ஊழியர்கள் எதிர்த்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானதால், உடலைத் தகனம் செய்ய மாநகராட்சி ஊழியர்கள் அனுமதித்தனர்.
இந்த நிலையில் அன்று இரவோடு இரவாக சுடுகாட்டை புல்டோசர் வைத்து மாநகராட்சி ஊழியர்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்ைத முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து பிரச்சினையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் என முத்தரப்பினர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
சுடுகாடு தொடர்பாக வலுத்து வரும் இந்தப் பிரச்சினையில் சம்பக்குளம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications