ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள்: துரைமுருகன்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலூர் மாவட்டத்தில் நாராயணி பீடத்தின் சார்பில் இதயத்தில் நோயுள்ள 320 இளம்சிறார்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய நிதியுதவி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கவும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கான கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தவும் முதல்வர் வந்தார்.
காலை 7 மணிக்கு வேனில் புறப்பட்ட நிலையில் மதியம் 12 மணிக்குத்தான் முதல் நிகழ்ச்சிக்கான இடத்துக்கே செல்ல முடிந்தது. வழியெங்கும் கூடிய ஏராளமான மக்களைத் தாண்டிச் செல்வதற்கு அவ்வளவு நேரம் பிடித்து விட்டது. மாலை 3 மணிக்குத்தான் அவர் மதிய உணவே சாப்பிட்ட போக முடிந்தது.
வழியெல்லாம் அவ்வளவு கூட்டம், அரை மணி நேரத்துக்குள் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்ட ஒரு மணி நேரம் பிடித்தது.
இதை அறிந்த ஜெயலலிதாவால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை தானே ஆரம்பித்தது போல உண்மையை மூடி மறைத்தார் கருணாநிதி என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை தானே ஆரம்பித்ததாக முதல்வர் எங்கே, யாரிடம் சொன்னார்? இந்த பல்கலைக்கழகத்தின் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர் பேசுகையில், தொடக்க காலத்தில் திருக்குறள் மாநாட்டினை நடத்தியது திராவிட இயக்கம் என்றும், பெரும் புலவர்கள் மத்தியில் மட்டும் இருந்த திருக்குறளை மக்களும் அறிந்து கொள்ளச் செய்திட பாடுபட்டது திராவிட இயக்கம் என்றும்,
திருவள்ளுவரின் உருவப்படம் அதிகாரப்பூர்வமாய் வெளிவரக் காரணமாய் இருந்து, அந்தப் படம் சட்டப் பேரவையில் இடம் பெறுவதற்கு காரணமாய் இருந்தவன் நான் என்ற வரலாற்றுக் குறிப்பினையும் எடுத்துக் கூறினாரே தவிர, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வருவதற்கு நன்தான் காரணம் என்றா பேசினார்.
இந்தப் பல்கலைக்கழகம் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வருவது அனைத்து மக்களுக்கும் தெரியும். ஆனால், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு சொந்தக் கட்டிடம் இல்லை. இந்த நிலையை மாற்றுவதற்காக, கட்டிடத்துக்கு இடம் ஒதுக்கி அதற்கு அடிக்கல் நாட்டப்படுகின்ற நேரத்தில் ஜெயலலிதா ஏன் வயிற்றெரிச்சல் பட வேண்டும்?
உண்மை எதுவும் தெரியாமல், உளறி இருக்கிறார் ஜெயலலிதா. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தொடங்கிய ஜெயலலிதா அதற்கான கட்டிடத்தை கட்டாமல் விட்டு விட்டார்.
அந்தக் குறையினை போக்கி இருப்பது திமுக ஆட்சி. இதுதான் உண்மை. கட்டிடம் எழுப்புவதற்கான நிதியை ஒதுக்கியது முதல்வர் கருணாநிதி.
ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள். காலையில் எழுந்தால் பத்திரிகைகளை ஒழுங்காகப் படியுங்கள். அப்புறம், அறிக்கையை நீங்களே எழுதுங்கள். தப்பு இருந்தால் போகப்போகச் சரியாகிவிடும்.
கண்டவரையும் விட்டு எழுதினால், இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும்.
இவ்வாறு 'போட்டு தாக்கியுள்ளார்' துரைமுருகன்.