இந்தியன் பிரீமியர் லீக்: 82 வீரர்கள் இன்று ஏலம்!!
மும்பை: இந்தியன் பிரீமியர் லீக்கில் இடம்பெற்றுள்ள 82 சர்வதேச மற்றும் தேசிய வீரர்கள் இன்று மும்பையில் ஏலம் விடப்படுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ள லீக்தான் இந்தியன் பிரிமீயர் லீக். 20-20 போட்டித் தொடரை இந்த லீக் நடத்தவுள்ளது. ஏப்ரல் 18ம் தேதி இப்போட்டித் தொடர் பெங்களூரில் தொடங்குகிறது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், மொஹாலி, கொல்கத்தா, ஹைதராபாத் உள்பட மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்த அணிகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன.
இந்த அணிகளில் இடம் பெறுவதற்காக 82 இந்திய மற்றும் சர்வதேச வீரர்களை ஏலம் விடும் பணி இன்று முற்பகல் மும்பையில் தொடங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவது இதுவே முதல் முறையாகும். பல கோடி ரூபாய் அளவுக்கு ஒவ்வொரு வீரரும் ஏலம் விடப்படவுள்ளனர்.
ரிச்சர்ட் மேட்லி நிறுவனம் வீரர்களை ஏலம் விடும் பணியை நடத்தவுள்ளது.
இந்த ஏலத்தில் சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், வீரேந்திர ஷேவாக் ஆகியோர் இடம் பெற மாட்டார்கள். இவர்களை ஐகான் வீரர்களாக ஐபிஎல் அறிவித்துள்ளது. இவர்கள் தங்களது சொந்த ஊர் அணிகளில் இடம் பெறுவார்கள். அந்த அணியில் இடம்பெறும் அதிக சம்பளம் பெறும் வீரரை விட இவர்களுக்கு 15 சதவீதம் கூடுதல் தொகை தரப்படும்.
கில்கிறைஸ்ட், ஷான் வார்னே, டோணி, அனில் கும்ப்ளே போன்ற வீரர்கள் முதலில் ஏலம் விடப்படவுள்ளனர்.
இன்றைய ஏலத்தில், கில்கிறைஸ்ட், டோணி, ரிக்கி பான்டிங் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு அதிக டிமாண்ட் நிலவுகிறது. கிட்டத்தட்ட 8 அணிகளுமே இவர்களை ஏலத்தில் எடுக்க முனைப்புடன் உள்ளன என்பதால் இந்த ஏலம் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.