பிரபாகரனை தப்ப விட யோசித்தோம்-இலங்கை
இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையிலிருந்து பிரபாகரன் வெளியேற அனுமதிப்பது குறித்து இடையில் யோசிக்கப்பட்டது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியேறினால் நிச்சயம் அவர் இந்தியாவிடம் சிக்கிக் கொள்வார். இதுதான் அவருக்கு உள்ள பெரிய பிரச்சினை.
இந்தியாவைத் தாண்டி எங்குமே பிரபாகரனால் செல்ல முடியாது. அது மிக மிகக் கடினம். இந்திய நீதிமன்றம் ஒன்று அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்தியா சட்டத்தை மிகவும் மதிக்கும் நாடு. பிரபாகரனை பிடித்துத் தருமாறு தொடர்ந்து இந்தியா எங்களுக்கு கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் முக்கியக் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வேயில் பிரபாகரனுக்கு புகலிடம் கொடுக்க அந்த நாட்டு அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அது நல்ல ஐடியாதான். ஆனால் அது இடி அமீன் தீர்வாகத்தான் அமையும்.
(உகாண்டாவில் 1971ம் ஆண்டு ரத்தப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் இடி அமீன். பின்னர் உகாண்டாவுக்கும், தான்ஸானியாவுக்கும் இடையே போர் மூண்டபோது 1979ம் ஆண்டு உகாண்டாவிலிருந்து தப்பி லிபியாவுக்கு ஓடினார். பின்னர் 1981ம் ஆண்டு சவூதிக்கு திரும்பினார். சவூதி அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. 2003ம் ஆண்டு மரணமடையும் வரை சவூதியிலேயேதான் இருந்தார் அமீன்.)
ஆஸ்திரேலியாவில் தற்போது விடுதலைப் புலிகளுக்கு தடை இல்லை. அங்கும் தடை விதிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். அதற்காகத்தான் நான் ஜனவரி மாதம் அங்கு சென்றேன். சில வேலைகளைப் பார்த்து விட்டுத் திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார் கொஹோனா.