ஜெயந்திரர் மீதான வழக்கில் மார்ச் 24 முதல் சாட்சிகள் விசாரணை
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் 6 ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரரின் தம்பி ரகு, மடத்தின் மேனேஜர் சுந்தரேச அய்யர், தாதா அப்பு, காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறிவிட்டார்.
எனவே, ஜெயேந்திரர் உள்பட 11 பேர் மீது மட்டும் சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. இதற்காக நீதிமன்றம் அரசுக்கு காலக்கெடு வழங்கியது. இந்த கெடுவும் முடியும் தருவாயில் நேற்று இந்த வழக்கு நீதிபதி முகமது இசாத் அலி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயேந்திரரை தவிர மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
அப்போது சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க கால அவகாசம் கேட்டு அரசு தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி அதை தள்ளுபடி செய்தார்.
மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 24ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அன்றையதினம் சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்றும் அறிவித்தார். இதற்காக சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்.