போலீசாருடன் ரவுடி கட்டிப்புரண்டு 'கும்மாங்குத்து'!
தென்காசி: தென்காசி அருகே கோவில் பொருட்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக ரவுடியைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது, அவர்களுடன் அந்த ரவுடி கட்டிப் புரண்டு சண்டை போட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி அருகே உள்ள வடகரை சுடலை மாடசாமி கோயிலில் கடந்த 2 வாரத்திற்கு முன் பீடங்களை சேதப்படுத்தி பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து அச்சன்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் விசாரனை நடததி வந்தார்.
இந்த நிலையில் கோயிலில் திருடியது பண்பொழி அருகே உள்ள கரிசல்குடியிருப்பை சேர்ந்த கந்தசாமி என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது அவர் குருவாயூருக்கு தப்பியோடி விட்டார்.
இந்நிலையில் அவர் கரிசல்குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தப்பியோடி முயன்றதால் போலீசாரும் அவரும் கீழே விழுந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீசாருடன் கட்டி புரண்டார் கந்தசாமி.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் பின்னர் சுதாரித்துக் கொண்டு கந்தசாமியை அமுக்குப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் கந்தசாமி கோயிலில் கொள்ளையடித்த பொருட்களை வீட்டிலுள்ள பூஜை அறையில் பதுக்கி வைத்திருப்பதும் இது குறித்து யாராவது போலீசுக்கு தகவல் கொடுத்தால் மந்திரம் போட்டு கொன்று விடுவதாக மிரட்டியதும் தெரிய வந்தது.
ஏற்கனவே கந்தசாமி ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.