கட்டாய தமிழ்-லாலுவால் எதிர்க்க முடியுமா: தாக்கரே சவால்

தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள தாக்கரே, அதை லாலுவால் எதிர்க்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவருக்கு எதிராக வன்முறையை தூண்டிவிட்ட மகாராஷ்டிர நவநிர்மாண சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கும் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கும் இடையே மோதல் தீவிரமாகி வருகிறது.
வட மாநிலத்தவர்கள் நடத்தும் சூரிய பூஜையை ராஜ் தாக்கரே வீட்டின் எதிரே நடத்தப் போவதாகவும், அதை ராஜ் தடுக்க முடிந்தால் தடுக்கலாம் என்றும் சவால் விட்டுள்ளார் லாலு.
இதற்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளதோடு லாலுவுக்கு புதிய சவாலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிவ சேனாவின் சாம்னா பத்திரி்க்கையில் அவர் எழுதியிருப்பதாவது:
பீகார் மாநிலத்தை நரகம் ஆக்கிய லாலு பிரசாத் ராஜ் தாக்கரேக்கு விட்டுள்ள சவாலில் மும்பைக்கு வந்து சூரிய வழிபாடு பூஜை நடத்தப் போவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் தமிழை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு சட்டம் கொண்டு வந்து உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாலு பிரசாத் பீகார்வாசிகளை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மெரினா கடற்கரையில் சூரிய வழிபாடு பூஜை நடத்த வேண்டும்.
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள அவரது கூட்டணி கட்சிதான் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துகிறது. இதை லாலு பிரசாத் இதை செய்வாரா?
மும்பை மாநகராட்சி நடவடிக்கைகளில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மும்பையில் உள்ள சில வட இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் முதலில் இந்த முயற்சியை சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, கெளஹாத்தி ஆகிய நகரங்களில் மேற்கொள்ளட்டும்.
மராத்தி மொழியையோ மும்பை நகரையோ அவமதிக்கும் எந்த நடவடிக்கையையும் மராட்டிய மண்ணின் மைந்தர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். மும்பை மாநகராட்சியில் இந்தியை திணிக்குமாறு கோரிக்கை விடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீது மராட்டிய மாநில அரசு வழக்கு தொடர்ந்து அவர்களை சிறையில் தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் பால் தாக்கரே.












Click it and Unblock the Notifications