திமுக தேர்தலில் அடிதடி-மண்டை உடைப்பு; அமைச்சரை கண்டித்து சாலை மறியல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் திமுக கட்சி தேர்தலில் இரு கோட்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலரது மண்டைகள் உடைந்தன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் திமுக கிளைக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் நடந்தது.
இந்த தேர்தலில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
இந்தத் தேர்தலில் அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவாளரான சேங்கை மாறன் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் தலைமையில் ஒரு கோஷ்டியும் போட்டியிட்டன.
தேர்தல் முடிவுகளை மதிய உணவு வேளைக்கு பின்பு தெரிவிப்பதாக தேர்தல் அதிகாரி ரவி தெரிவித்தார். ஆனால் இதை இரு தரப்பும் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து ரவி அங்கிருந்து காரில் சிவகங்கை நோக்கி புறப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் தரப்பினர் ரவியின் காரை முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து மாறன் மற்றும் மகாலிங்கம் தரப்புக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. ஒருரை ஒருவர் விரட்டி விரட்டி தாக்கிக் கொண்டனர். இதில் பலரது மண்டை உடைந்தது.
இதையடுத்து மகாலிங்கம் தலைமையில் திமுகவினர் அமைச்சரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு அந்த வழியாக வந்த பொது மக்களின் கார்களை அடித்து உடைத்தனர்.
அப்போது அங்கு வந்த தாசில்தார் ஜெயசந்திரன், டிஎஸ்பி நாகஜோதி ஆகியோரது வாகனங்களையும் இவர்கள் முற்றுக்கையிட்டவே போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக இரு கோஷ்டிகளையும் சேர்ந்த 53 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.