டெபாசிட் இழந்த 'கருப்பு எம்.ஜி.ஆர்.' - கருணாநிதி
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக தோல்வி அடைந்தது குறித்து முதல்வர் கருணாநிதி கவிதை பாடியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கவிதை:
ஆர்ப்பாட்டமென்ன, போர்ப்பாட்டு என்ன;
"சார்பட்டா" பரம்பரையென்ற சவுக்கடி பேச்சுத்தான் என்ன, என்ன?
வேர்பட்டுப் பிறக்கின்ற பூமியிலே மழை
நீர்பட்டு முளைக்கின்ற காளான் போலே
ஒரு கட்சி உதிக்கும் மறு கட்சி பிறப்பதற்குள்!
இரு கட்சி இருள் போக்குமென்று இங்குள்ள ஏடெல்லாம்
திருவிழா தினந்தோறும் நடத்திப் பார்த்து; ஏமாந்த காரணத்தால்
இரு விழி மூடிக் கொண்ட குருடுகளாய் ஆகி விட்டார்!
நல்லாட்சி நடக்கும் தமிழகத்தில்
உள்ளாட்சி இடைத் தேர்தல் நடந்ததம்மா!
நடிகர் இருவர் ஆட்சியிலே: நாடு வரப் போகின்றதென்று;
நடுநிலை ஏடுகள் கூட நம் மீது கெடு மதி கொண்டு சீறி
நன்மையெது தீமையெது என்பதறியாது அறவழிகள் மீறி
உண்மையைப் பொய்யென்றும், பொய்யைப் புனிதமென்றும்
வெளியிட்டார் செய்திகளை: அவையனைத்தும்
ஒளிபட்ட இருளைப் போல் ஓடி ஒளிந்ததம்மா!
நூற்றுக்கு ஒரு விழுக்காடு இடம் கூட இவர் தம் பொய்க்
கூற்றுக்கு செவி சாய்த்து வெற்றியெனக் கிடைக்கவில்லை!
கருப்பு நிற எம்.ஜி.ஆர். என்றும், கர்ம வீரர் தொண்டர் (சரத்குமார்) என்றும் கர்ச்சித்தோர்
கட்டுத் தொகையைக் கூட இழந்து நிற்கும் பரிதாபத்தை என்ன சொல்ல?
எறும்புத் தலைகளை இமய மலைகளாய் வர்ணித்த இதழாளர்களே;
கரும்பிலும் இனிய செய்தியாய் கழகக் கூட்டணியன்றோ
பெரு வெற்றி ஈட்டியது இன்று!
அன்பு உடன்பிறப்புக்காள், அதற்குள் துள்ளிக் குதிக்காமல்
அடுத்து வரும் வெற்றிகட்கு இது அச்சாரமென அயராது உழைத்திடுக!
இவ்வாறு கவிதையில் கூறியுள்ளார் கருணாநிதி.