இந்தியர்களுக்கு ஓபாமா புகழாரம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் வளமைக்கும், வெற்றிக்கும் முக்கிய காரணம் அமெரிக்க இந்தியர்களின் உழைப்பு. மகாத்மா காந்தியை முன்னுதாரணமாக கொண்டு செயல்படும் நான் அமெரிக்க அதிபரானால், இந்திய, அமெரிக்க உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதை வலுப்படுத்துவேன் என்று பாரக் ஓபாமா கூறியுள்ளார்.
நியூயார்க்கிலிருந்து வெளியாகும் இந்தியா அப்ராட் வார இதழில் இதுதொடர்பான கட்டுரையை ஓபாமா எழுதியுள்ளார். அதில் இந்தியர்களை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். மேலும் காந்தியை தனது முன்னணுதாரணமாக கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் ஓபாமா.
அதிபர் தேர்தலில் இந்திய வம்சவாளியினரின் வாக்குகளைக் குறி வைத்து இந்த கட்டுரையை எழுதியுள்ளார் ஓபாமா.
ஓபாமாவின் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் ..
உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகள் இந்தியாவும், அமெரிக்காவும். உலகின் பழையான ஜனநாயக நாடும், மிகப் பெரிய ஜனநாயக நாடுமான இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்பது இயற்கையானது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பட வேண்டியது அவசியாகும். அதனால்தான் இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நான் ஆதரவு அளித்தேன்.
இரு நாடுகளும் பல்வேறு பிரச்சினைகளில் பொதுவான கருத்துக்களைக் கொண்டுள்ளன.
இரு நாடுகளுமே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இரு நாடுகளுமே அல் கொய்தா மற்றும் அதன் கூட்டு அமைப்புகளை எதிர்த்துப் போராடி வருகின்றன.
எனது வாழ்க்கையில் மகாத்மா காந்திக்கு முக்கிய இடம் உண்டு. எனக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக, ஆதர்ச மனிதராக விளங்குகிறார் காந்தி. சாதாரண மக்கள் இணைந்தால் மிகப் பெரிய காரியங்களை ஆற்ற முடியும் என்பதற்கு அவர் சரியான உதாரணமாகத் திகழ்கிறார்.
அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்திய வம்சவாளியினரின் பங்கு மிக முக்கியமானது. மிகப் பெரிய தொழிலதிபர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், கடுமையாக உழைப்போர் என பலரும் இந்திய வம்சாவளியினராக உள்ளனர்.
அமெரிக்காவின் வளமைக்கும், வெற்றிக்கும் இவர்கள் முக்கிய காரணமாக உள்ளனர்.
நான் அதிபர் பதவிக்கு உயர்ந்தால், இந்திய வம்சவாளியினரின் துணையோடு அமெரிக்கா எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுவேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் ஓபாமா.












Click it and Unblock the Notifications