கருங்கடலில் கப்பல் மூழ்கியது-25 இந்தியர்கள் பலி?
பனாமா நாட்டுக்குச் சொந்தமான எம்.வி. ரெஸாக் என்ற கப்பல் ரஷ்யாவிலிருந்து இரும்புத் துண்டுகளை ஏற்றிக் கொண்ட துருக்கி கிளம்பியது. கடந்த 18ம் தேதி இக்கப்பல் துருக்கி, கருங்கடல் பகுதியில் வந்தபோது காணாமல் போய் விட்டது.
இதையடுத்து கப்பலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதுவரை கப்பல் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், கப்பலில் இருந்தவர்கள் கதி என்ன என்றும் தெரியவில்லை.
கருங்கடல் பகுதி கடும் குளிரான பகுதியாகும், எனவே நீரில் மூழ்கியவர்களால் அரை மணி நேரத்திற்கு மேல் உயிரோடு இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே கப்பலில் இருந்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இக்கப்பலில் 25 பேர் இந்தியர்கள் ஆவர். இவர்களும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 25 பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆலந்தாழை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி அலங்காரன் பியோ (38), பெரியதாழையைச் சேர்ந்த சேசு மெஸ்லர் (26) ஆகியோர் உள்பட 3 பேர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்.
காணாமல் போய் விட்ட பனாமா கப்பல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. 25 ஆண்டு பழமை வாய்ந்த அந்தக் கப்பல் மோசமான நிலையில் இருந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக பனாமா கப்பல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.