தர்மபுரி போலீஸாருக்கு இன்று 'நார்கோ' சோதனை
பெங்களூர்: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் காணாமல் போனது தொடர்பாக சந்தேக வலையில் சிக்கியுள்ள 8 போலீஸாருக்கு இன்று பெங்களூரில் உண்மை கண்டறியும் (நார்கோ அனாலிசிஸ்) சோதனை நடைபெறுகிறது.
அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 6 துப்பாக்கிகள், ஒரு வாக்கி டாக்கி ஆகியவை கடந்த 8ம் தேதி காணாமல் போயின. முதலில் நக்சலைட்டுகள்தான் இதற்குக் காரணம் என கூறப்பட்டது.
பின்னர் போலீஸார் மீது சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள வாழைத் தோப்பில் புதைக்கப்பட்ட நிலையில், 5 துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. இதையடுத்து போலீஸார் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது.
இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் உள்பட 8 காவலர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
சென்னையில் உள்ள மன நல மருத்துவக் கழகத்தில் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென 8 பேரும் மீண்டும் தர்மபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று 8 பேரும் பெங்களூர் கொண்டு வரப்பட்டனர். இன்று அவர்களுக்கு நிமான்ஸ் மருத்துவமனையில் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. இந்த சோதனைக்காக தமிழக காவல்துறை ரூ. 80 ஆயிரம் கட்டணம் செலுத்தியுள்ளதாம்.
இன்றைய உண்மை கண்டறியும் சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications