'ஜெய் தெலுங்கானா'...வெளிநடப்பு!!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரையாற்றி துவக்கி வைத்தார்.
அப்போது நாடாளுமன்றத்தி்ல் நிகழ்ந்த சில இன்ட்ரஸ்டிங் சைட் லைட்ஸ்:
- பிரதீபா பாட்டீல் ஆற்றிய முதல் நாடாளுமன்ற உரையை அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத், முக்கியப் பிரமுகர்களுக்கான மாடத்திலிருந்து கவனித்தார். கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பிரதீபா பாட்டீல் உரையாற்றினார். மொத்தம் 19 பக்கங்கள் கொண்டதாக அவரது உரை இருந்தது.
- நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக வந்த பிரதீபா பாட்டீலை, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, ராஜ்யசபா தலைவர் முகம்மது ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
- பிரதீபா பாட்டீல் உரையாற்றத் தொடங்கியபோது, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பிக்கள் ரவீந்தர் நாயக் தராவத், வினோத் குமார், மதுசூதன் தக்கலா ரெட்டி ஆகியோர் எழுந்து தனி தெலுங்கானா மாநிலம் கோரி ஜெய் தெலுங்கானா என்று கோஷமிட்டனர்.
3 முறை ஜெய் தெலுங்கானா என்று கோஷமிட்ட அவர்கள் கையில் தட்டிகளையும் ஏந்தி 5 நிமிடம் நின்றனர். பின்னர் நாடாளுமன்ற மைய மண்டபத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
வாஜ்பாய் உடல் நலக்குறைவு:
- இன்றைய கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்ளவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர் வரவில்லை என்று தெரிகிறது.
- பிரதீபா பாட்டீல் உரையாற்றியதை காங்கிரஸ் தலைவர் சோனியா தனது மகன் ராகுல் காந்தி எம்பியுடன் அமர்ந்து கேட்டார்.
இருவரும் லோக்சபா எம்.பிக்கள். இதுவரை நாடாளுமன்றத்தில் இருவரும் அருகருகே அமர்ந்ததில்லை. முதல் முறையாக இன்றுதான் சோனியாவுக்கு பக்கத்தில் ராகுலுக்கு சீட் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸில் ராகுலுக்கு முக்கியத்துவம் கூடியுள்ளதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது.
- அதேபோல 3வது வரிசையில் முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் பரூக் அப்துல்லா அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமர் அப்துல்லா அமர்ந்திருந்தார்.
- வழக்கமாக குடியரசுத் தலைவர் மைய மண்டபத்திற்கு வருவதற்கு முன்பு டிரம்பட் வாசிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை வெறுமனே, குடியரசுத் தலைவர் வருகிறார் என்ற அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது. அதேபோல குடியரசுத் தலைவர் போகும்போதும் டிரம்பட் முழங்கவில்லை.
குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்னர் லோக்சபா தனியாக கூடியது. அப்போது நடப்பு உறுப்பினர் பிரகாஷ் பரஞ்ச்பேயின் மறைவுக்கும், மேலும் 6 முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.