தீவிரவாதம் இஸ்லாமுக்கு எதிரானது
லக்னெள: தீவிரவாதம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு புறம்பான செயல் என்று உ.பி. மாநிலம் தியோபாந்த் நகரில் நடந்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தரங்கில் ஒரு மனதாக பிரகடனப்படுத்தப்பட்டது.
உ.பி. மாநிலம் தியோபாந்த் நகரில், இஸ்லாமிய மதரசாக்கள் சங்கம் சார்பில், ஆசியாவின் முக்கிய இஸ்லாமிய மதரசா பள்ளிகளின் ஆசிரியர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்ட அகில இந்திய தீவிரவாத எதிர்ப்பு மாநாடு நடந்தது.
இதில் அனைத்து வகையான வன்முறைச் செயல்கள், தீவிரவாத செயல்கள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் நெறிகளுக்கும், மதத்திற்கும் எதிரான செயல். இதை இஸ்லாமிய மதரசாக்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை, சூறையாடுதல், தவறான எண்ணத்துடன் செயல்படுதல் ஆகியவற்றைப் பாவமாகவும், குற்றமாகவும் இஸ்லாம் கருதுகிறது. எனவே தீவிரவாதத்திற்கும், வன்முறைக்கும் இஸ்லாமில் இடம் இல்லை என்ற பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் அரசு பாரபட்சத்துடன் நடப்பதாகவும் இந்த மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது. மதரசாக்கள் வன்முறையையும், தீவிரவாதத்தையும் பரப்புவதாக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதற்கும் இந்த மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இஸ்லாமிய சிந்தனைகளைப் போதிக்கும் அனைத்துப் பள்ளிகளும், இஸ்லாமிய விரோத, தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு தரக் கூடாது, இதில் சுய கட்டுப்பாட்டை மதரசாக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தாருல் உலூம் தியோபாந்த் தலைமை மதகுருமாரான மௌலானா மர்கூப் உர் ரஹ்மான் மாநாடு குறித்துக் கூறுகையில், எங்களுக்கு எந்த தீவிரவாதிகளுடனும், தீவிரவாத அமைப்புகளுடன், தீவிரவாத செயல்களுடனும் எவ்வித தொடர்பும் இல்லை.
தீவிரவாதத்தை அனைத்து நிலைகளிலும் நாங்கள் எதிர்க்கிறோம். அதுதொடர்பான பிரசாரத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.
இஸ்லாமின் போதனைகளுக்கு முற்றிலும் புறம்பானது தீவிரவாதம். இஸ்லாம் அன்பையும், அமைதியையும் மட்டுமே போதிக்கிறது.
அப்பாவி மக்களைக் குறி வைக்கும் எந்தவித தீவிரவாத நடவடிக்கையும், இஸ்லாமின் கோட்பாடுகளுக்குப் புறம்பான செயலாகும்.
மனிதகுலத்திற்கு சமத்துவத்தையும், சகிப்புத் தன்மையையும் போதிப்பது இஸ்லாம்.
இஸ்லாமிய போதனையின் உண்மையான பிரசாரகர்களாக இஸ்லாமிய மதரசாக்கள் செயல்படுகின்றன. இவர்களுக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அவர்.
இந்த பிரமாண்ட மாநாட்டில், இஸ்லாமிய அறிஞர்கள் தவிர, நாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களிலிருந்தும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மதரசாக்களுக்குப் பெயர் போன நகரம் தியோபாந்த். இந்த மாநாட்டையொட்டி தியோபாந்த் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.












Click it and Unblock the Notifications