தாவூத்தைப் பிடிக்க முடியாது-இன்டர்போல்
மும்பை: சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராகிமை, அவர் பதுங்கியிருக்கும் நாடே பிடித்துத் தந்தால்தான் உண்டு. எங்களால் பிடிக்க முடியாது, அதற்கான அதிகாரமும் எங்களுக்கு இல்லை என்று சர்வதேச போலீஸ் கூட்டமைப்பான இன்டர்போல் கைவிரித்து விட்டது.
சர்வதேச போலீஸான இன்டர்போல் அமைப்பின் பொதுச் செயலாளர் ரொனால்ட் நோபிள் மும்பை வந்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒரு குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்குமாறு எங்களால் எந்த நாட்டையும் கட்டாயப்படுத்த முடியாது.
தாவூத் இப்ராகிம் விவகாரத்திலும் இது பொருந்தும். அவர் எங்கு மறைந்திருக்கிறாரோ, அந்த நாட்டு அரசுதான் தாவூத்தைப் பிடித்து இன்டர்போலிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் தாவூத்தை எங்களால் இந்தியாவிடம் ஒப்படைக்க முடியும்.
இன்டர்போல் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகள்தான் தேடப்படும் குற்றவாளியை இன்டர்போலிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும். அல்லது தங்களது நாட்டில் வைத்தே அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அவரை எங்களிடம் ஒப்படைப்பது குறித்து பாகிஸ்தான்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.