10, பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம்
சென்னை: பத்தாவது மற்றும் பிளஸ்டூ மாணவ, மாணவியருக்கான தேர்வு நேரம் 10 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வை கிட்டத்தட்ட 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பிளஸ்டூ எனப்படும் 12-ம் வகுப்பு தேர்வை 6 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
பொதுத் தேர்வுக்கான மொத்த நேரம் 3 மணி நேரம். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடியும்.
10 மணிக்கு தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும். இதையடுத்து மாணவ, மாணவியர் பதட்டப்படாமல் கேள்வித்தாளைப் புரட்டிப் பார்க்கவும், பதட்டத்தைத் தணித்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், நிதானமாக தேர்வு எழுத வசதியாகவும், கூடுதல் நேரம் தரப்படவுள்ளது.
தற்போது சிபிஎஸ்சி மாணவ-மாணவர்களுக்கு தேர்வு தொடங்குவதற்கு முன்பு கேள்வித்தாளை நிதானமாக படித்துப் பார்க்க 15 நிமிடம் அவகாசம் வழங்கப்படுகிறது. அது போல மாநில தேர்வித்துறையும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைப் பரிசீலித்த கல்வித்துறை அதிகாரிகள் 10 நிமிட அவகாசம் தர முடிவு செய்துள்ளனர்.
இந்தப் புதிய முறையின்படி காலை 9.45 மணிக் கெல்லாம் மாணவர்கள் ஹாலில் வந்து அமர்ந்து விட வேண்டும். 9.50 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். 10 நிமிடம் படித்துப் பார்க்கலாம். 10 மணிக்கு தேர்வு தொடங்கும்.
இருப்பினும் 10 மணிக்கு முன்னதாக தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கல்வித்துறையில் சிலர் இந்த புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், மாணவர்களுக்கு கூடுதலாக 10 நிமிடம் கொடுக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது.