நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி-ஒத்திவைப்பு
டெல்லி: விவசாயிகள் பிரச்சினையை வலியுறுத்தி இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.
ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நேற்று நாடாளுமன்றம் கூடியது. லோக்சபா கூடியதுமே விவசாயிகள் தற்கொலை பிரச்சினையை விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி தேசிய ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நண்பகல் 12 மணிக்கு மேல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் தாக்கலின்போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் தங்களது மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி அமளியில் ஈடுபட்டன. இதனால் மாலை 3 மணிக்கு லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல ராஜ்யசபாவிலும் அமளி நிலவியது.
இந்த நிலையில் இன்றும் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்த முயன்று தோற்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
இதேபோல ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபாவும் நண்பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications