தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 5 பேர் பலி
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள புவனீஸ்வரிபேட்டை என்ற இடத்தில் இன்று காலை தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிருடன் கருகி பலியானார்கள்.
இன்று காலை 9.30 மணியளவில் அந்தத் தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு தொழிலாளர்கள் உயிருடன் கருகினர்.
நான்கு பேரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டனர்.
தீப்பெட்டித் தொழிற்சாலை இருந்த கட்டடம் முழுவதும் தீயில் நாசமாகி தரைமட்டமாகி விட்டது.
பள்ளியில் தீ-வினாத்தாள்கள் சாம்பல்:
இதற்கிடையே வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தால் மாணவர்களின் தேர்வு வினா தாள் மற்றும் விடை தாள்கள் எரிந்து நாசமானது.
வாசுதேவநல்லூர் தெற்கு ரத வீதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் இருந்த பெஞ்சுகள், மற்றும் மாணவ, மாணவிகளின் வினா மற்றும் விடை தாள்கள் எரிந்து சாம்பலாயின.
மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.