சென்னை அணியின் பயிற்சியாளர் கெப்ளர் வெஸல்ஸ்
உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்காக விளையாடிய ஒரே வீரர் வெஸ்ஸல்ஸ். இனவெறி காரணமாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் தடை விலக்கப்பட்ட பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக வெஸ்ஸல்ஸ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் படு வேகமாக சர்வதேச அரங்கில் தென் ஆப்பிரிக்க அணி பல வெற்றிகளைக் குவித்தது.
50 வயதாகும் வெஸ்ஸல்ஸ் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருட ஒப்பந்தத்தின் கீழ் அவர் பயிற்சியாளராகியுள்ளார்.
மார்ச் 20ம் தேதி அவர் அணியில் இணைந்து கொள்வார். இத்தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் விவகாரத் தலைவரும், முன்னாள் தேசியத் தேர்வாளருமான வி.பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ள வெஸ்ஸல்ஸ், இரு அணிகளுக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். முன்னாள் இந்திய வீரரும், தற்போது கிரிக்கெட் வர்னணையாளராக பணியாற்றி வருபவருமான முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எல். சிவராமகிருஷ்ணன்தான், வெஸ்ஸல்ஸை சென்னைக்கு கொண்டு வர தீவிரமாக முயன்றவர்.
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்க வெஸ்ஸல்ஸை இந்திய கிரிக்கெட் வாரியம் நாடியது. இருப்பினும் அது கைகூடவில்லை. இந்த நிலையில் சென்னைக்கு அணிக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.
சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து வெஸ்ஸல்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை அணியின் இளம் வீரர்களை சிறப்பான நிலைக்குக் கொண்டு வர உழைக்கப் போவதாக வெஸ்ஸல்ஸ் தெரிவித்துள்ளார்.
இதில் விசேஷமான விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலிய அணி வீரரும், சென்னை அணியில் இடம்பெற்றுள்ளவருமான மாத்யூ ஹெய்டன், வெஸ்ஸல்ஸுடன் ஆஸ்திரேலியாவில் பல போட்டிகளில் ஆடியவர். இப்போது ஹெய்டன் இடம் பெற்றுள்ள சென்னை அணிக்குப் பயிற்சியாளராக வருவது குறித்து வெஸ்ஸல்ஸ் இரட்டிப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.