சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை- வாலிபருக்கு குண்டாஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையடித்த குற்றாலத்தை சேர்ந்த கொள்ளையனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி ஏட்டையாபுரம் ரோடு ஹாசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி இவரது வீட்டில் 75 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் குற்றாலம் புலியருவி ரோட்டை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவரை கைது செய்தனர்.
இவர் மீது மதுரை மாவட்டத்தில் 3 கொள்ளை வழக்குகளும், தட்டம்பாறை மட்டும் சிப்காட் போலீசில் மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தீபக் தமோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று கலெக்டர் பழனியாண்டி உத்தரவு பிறபித்தார். இதையடுத்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மைக்கேல்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.