For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைதி..கற்பழிப்பு..பொய் வழக்கு: நதியாவுக்கு ஊரில் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

Nadia
திருவண்ணாமலை: வேலூர் கைதி கணேசனால் மனைவி என்றும், அவரை சிறைக் காவலர்கள் கற்பழித்து விட்டதாகவும் புகார் கூறப்பட்டு பெரும் பரபரப்பில் சிக்கிய இளம் பெண் நதியாவை, அவரது ஊருக்குள் அனுமதிக்க கிராமத்தினர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்த போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நதியாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அமர்நாத் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நதியா. சில வாரங்களுக்கு முன் வேலூர் மத்திய சிறையில் தண்டணை கைதியாக இருக்கும் கணேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், துணை ஜெயிலர் மற்றும் 3 சிறை வார்டர்கள் சேர்ந்து தனது மனைவி நதியாவை கடத்திக் கற்பழித்து விட்டதாக கூறியிருந்தார். மேலும் அவரை ஆபாச படம் எடுத்து வைத்துள்ளதாகவும், நதியாவைக் காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்துத் தருமாறும் கோரினார்.

இதையடுத்து 3 வார்டன்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன. திருப்பூரில் வைத்து நதியாவைப் பிடித்த போலீஸார் அவரை சென்னைக்குக் கொண்டு வந்தனர். உயர்நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோது, நதியாவுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று அவரது தாயார் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் நதியா இன்னும் கன்னி கழியாதவர் எனத் தெரிய வந்தது. மேலும் அவரை யாரும் பாலியல் கொடுமைப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கணேசனின் வக்கீல்களை கடுமையாக கண்டித்த உயர்நீதிமன்றம், இது ஒரு நாடகம் போல தெரிகிறது. எனவே இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

நதியாவை அவரது தாயாருடன் செல்லவும் நீதிமன்றம் அனுமதித்தது.

இந் நிலையில் நதியாவை அவரது சொந்த கிராமமான திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அமர் நாத்புதூர் கிராமத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு கூடிய கிராம மக்கள் நதியாவை ஊருக்குள் வர அனுமதி மறுத்தனர். உன்னால் ஊருக்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. எனவே ஊருக்குள் வரக் கூடாது என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும், மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் செங்கம் விரைந்தார். பின்னர் டி.எஸ்.பி. பாதுகாப்புடன் நதியாவை போலீஸார் ஊருக்குள் அழைத்துச் சென்றனர். பிறகு அவரது தாயார் ராதா மற்றும் அண்ணன் சேகரிடம் நதியாவை ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X