கொலை மிரட்டல்-பாதுகாப்பு கோரும் ராஜ் தாக்கரே
மும்பை: தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறும் மகராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மகாராஷ்டிர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மாநிலத்தவர் குறித்த இவரது பேச்சால் மும்பையில் பெரும் கலவரம் ஏற்பட்டது. வட மாநில அப்பாவிகள் அடித்து, உதைக்கப்பட்டனர்.
இதையடுத்து ராஜ் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார்.
மும்பையில் பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது ராஜுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சிவாஜி பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந் நிலையில் நிலைமை சகஜமானதைத் தொடர்ந்து அவருக்குத் தரப்பட்ட பாதுகாப்பு சற்று குறைக்கப்பட்டது.
இந் நிலையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீலை நேரில் சந்தித்த அவர், தனக்கு வந்துள்ள 3 பக்க கடிதம் ஒன்றை கொடுத்தார். அதில் துப்பாக்கியால் தலையில் சுட்டு கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் செல்போன்கள் மூலமும் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார் ராஜ் தாக்கரே.












Click it and Unblock the Notifications