ஹெய்டன் மீது நடவடிக்கை இல்லை!
சிட்னி: இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை விஷக் களை என்று வர்ணித்தது தொடர்பாக இன்று ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டனிடம் விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய நடத்தை விதி மீறல் விசாரணைக் கமிட்டி, வெறும் எச்சரிக்கையுடன் ஹெய்டனை விட்டு விட்டது.
இந்திய கிரிக்கெட் அணியினரோடு ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து மோசமான வார்த்தைகளால் விளையாடி வருகின்றனர். முன்பு போல அசைக்க முடியாத அணியாக ஆஸ்திரேலியா தற்போது இல்லை. கொஞ்சம் ஊன்றி நின்று விளையாடினால், ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்து விடலாம் என்ற நிலை உருவாகி விட்டது.
இதை ஆஸ்திரேலிய வீரர்களால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தக் கோபத்தை தற்போது எதிரணியினர் மீது காட்டத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக இந்திய அணியினர் மீது சரமாரியாக அவதூறு வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வருகின்றனர்.
சிட்னி கிரிக்கெட் போட்டியின்போது ஹர்பஜன் சிங்குடன் மாத்யூ ஹெய்டனும், ஆண்ட்ரூ சைமண்ட்ஸும் அவதூறு வார்த்தைகளால் மோதினர். அதேபோல கேப்டன் ரிக்கி பான்டிங்கும் இந்த வம்புச் சண்டையில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இஷாந்த் சர்மாவும் இந்த சண்டையில் இழுத்து அசிங்கப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், ஹர்பஜன் சிங்கை, விஷக் காளான் செடி என மாத்யூ ஹெய்டன் வர்ணித்துள்ளது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் கூறியது. இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், தனது நடத்ைத விதிமுறைகளின் பிரிவு 9ன் கீழ் ஹெய்டன் மீது புகார் குற்றச்சாட்டைப் பதிவு செய்தது.
எதிரணியினர் குறித்து ஆட்சேபகரமான பேச்சுக்களை பொது இடங்களில் வெளிப்படுத்துவதை இந்த நடத்தை விதிமுறை தடை செய்கிறது.
ஹெய்டன் மீதான இந்தக் குற்றச்சாட்டு குறித்து இன்று இரவு விசாரணை நடந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நடத்தை விதிமுறை மீறல் ஆணையர் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் இறுதியில் ஹெய்டன் தவறு செய்தது நிரூபணமானதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு எந்தத் தண்டனையும் அறிவிக்கப்படவில்லை. மாறாக இனிமேல் இப்படிப் பேசக் கூடாது என்ற எச்சரிக்கை மட்டும் அவருக்குக் கொடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
விசாரணைக்குப் பின்னர் ஹெய்டன் வெளியிட்ட அறிக்கையில், நான் அப்பாவி. கிரிக்கெட்டையோ அல்லது வீரர்களையோ இழிவுபடுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விசாரணைக் குழுவின் தீர்ப்பை நான் மதிக்கிறேன், ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்பார்த்தது போலவே ஹெய்டனை எந்தவகையிலும் தண்டிக்காமல் விட்டு விட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.