திருமண பதிவை திரும்பப் பெற்றார் சஞ்சய் தத் - திருமணம் ரத்து
பனாஜி: நடிகர் சஞ்சய் தத்துக்கும், அவரது காதலி மான்யதாவுக்கும் இடையே நடந்த திருமணம் ரத்தாகியுள்ளது. திருமணம் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை இருவரும் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டனர்.
கோவாவைச் சேர்ந்தவர் மான்யதா. மாடல் அழகியான இவர் கடந்த 2 வருடங்களாக சஞ்சய் தத்துடன் நெருக்கமாக பழகி வந்தார். சஞ்சய் தத் சிறைக்குச் சென்றபோதும், விசாரணையில் அவஸ்தைப்பட்டபோதும் உற்ற துணையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் சஞ்சய் தத்தும், மான்யதாவும் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பாக தெற்கு கோவாவில் உள்ள சால்செட் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக விண்ணப்பமும் கொடுத்தனர்.
ஆனால் இந்த விண்ணப்பத்துடன், மான்யதா இணைத்திருந்த குடியிருப்பு சான்றிதழ் போலியானது என்று பதிவுத் துறை தெரிவித்தது. அதுகுறித்து உரிய விளக்கம் அளிக்காவிட்டால் திருமணத்தை ரத்து செய்ய நேரிடும் எனவும் எச்சரித்தது. மேலும் திருமணப் பதிவு தொடர்பான நடைமுறைகளையும் அது நிறுத்தி வைத்தது.
இன்னொரு சிக்கலாக, மான்யதாவின் முதல் கணவர் ஷேக் மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் மீது வழக்கு தொடர்ந்தார். அதில், எனக்கும் மான்யதாவுக்கும் இன்னும் முறைப்படி விவாகரத்து ஆகவில்லை. இஸ்லாமிய முறைப்படி நான் மணந்து இன்னும் விவாகரத்து செய்யப்படாத மான்யதாவை, சஞ்சய் தத் மணந்து கொண்டது இஸ்லாமியச் சட்டப்படி தவறானதாகும். எனவே இந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், சஞ்சய் தத்தும், மான்யதாவும் தாங்கள் செய்த திருமணப் பிரமாணப் பத்திரத்தை பதிவாளர் அலுவலகத்திலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டனர்.
இதுகுறித்து இருவரும் தாக்கல் செய்த மனுவில், 1867ம் ஆண்டு போர்ச்சுகீசிய திருமணச் சட்டத்தின் கீழ் நாங்கள் பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளோம். தற்போது அதை நாங்கள் விரும்பவில்லை. எனவே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கோவா திருமணச் சட்டத்தின் கீழ் சஞ்சய், மான்யதா திருமணம் ரத்தாகியுள்ளது.












Click it and Unblock the Notifications