திமுக எம்.எல்.ஏ மருமகன் கார் மீது குண்டு வீச்சு
நெல்லை: திருநெல்வேலி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாலைராஜா எம்எல்ஏ மருமகன் கார் மீது பைக்கில் வந்த மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்கினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராமசாமியின் மகன் ரகுராமையா. இவர் ஒரு வழக்கறிஞர். திமுக எம்எல்ஏ மாலைராஜாவின் மருமகன் ஆவார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் மாமனார் வீட்டுக்கு சுமோ காரில் ரகுராமையா சென்றார். காரை தச்சநல்லுரை சேர்ந்த துரைப்பாண்டி மகன் முத்துராஜ் ஓட்டினார்.
வண்ணார்பேட்டை பைபாஸ் ஆற்றுபாலம் அருகே சென்றபோது காரை பின் தொடர்ந்து இரு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் காரில் இருந்தவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
ஆனால் கார் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு காரை வேகமாக ஓட்டியதால் அவர்கள் காயமின்றி தப்பினர். குண்டு வீச்சில் கார் பேனட் பெரும் சேதம் அடைந்தது.
குண்டு வீச்சு குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை ஆணையர் தினகரன், இன்ஸ்பெக்டர் நாகராஜன், ராஜ்குமார், மற்றும் நுண்ணறிவு, தடவியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். எம்எல்ஏ மாலைராஜாவும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராகுராமையாவின் சகோதரி சவுமியா, ரமேஷ் என்ற டிரைவரைக் காதலித்து வந்தார். ரமேஷ் சமீபத்தில் சவுமியாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
இதுதொடர்பாக சவுமியாவை கடத்திச் சென்று விட்டார் ரமேஷ் என்று கூறி போலீஸில் புகார் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இதன் காரணமாக இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.