'முருகதாஸ்'... இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

தீனா, ரமணா, கஜினி ஆகிய படங்களை இயக்கியவர் முருகதாஸ். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஸ்டாலின் என்ற மிகப் பெரும் ஹிட் படத்தைக் கொடுத்தவர். தற்போது கஜினியை இந்தியில் அமீர்கான், ஆசினை வைத்து ரீமேக் செய்து வருகிறார்.
மிகப் பெரிய ஹிட்கள் கொடுத்தாலும் மிக அமைதியான, ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய மனிதர்.
இந் நிலையில் கஜினி பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சேலம் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அடுத்த படத்திற்காக முருகதாஸிடம் அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். ஆனால் அவர் இழுத்தடித்து வந்தார். இதனால் அட்வான்ஸைத் திருப்பிக் கேட்டேன். அவர் ஆள் வைத்து மிரட்டுகிறார். மேலும் கஜினி படத்தை இந்தியில் எனக்குத் தெரியாமல் எடுக்கிறார். அதற்கான உரிமையைத் தொகையையும் தரவில்லை.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சந்திரசேகர்.
இந்தப் புகாரைப் பெற்ற சேலம் போலீஸார் ஏதோ மிகப் பெரிய தீவிரவாதியைப் பிடிக்க கிளம்பியது மாதிரி சென்னைக்கு விரைந்து வந்தனர். நேற்று பிற்பகலில் எழுத்தாளர் சுஜாதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தார் முருகதாஸ்.
அப்போது அங்கு வந்த சேலம் போலீஸார், கொலையாளியைப் பிடிப்பது போல கழுத்தில் கையை வைத்து முருகதாஸை விசாரணைக்கு வாருங்கள் என்று கூறி இழுத்துச் சென்றனர். அவரது செல்போனைப் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.
பின்னர் அவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு சென்றனர். போலீஸாரின் இந்த அடாவடி செயலால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக முருகதாஸை சேலத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் போலீஸார் விரைந்தனர். இந்த நிலையில் தீப்பொறியாக இந்த விவகாரம் திரையுலகில் பரவியது. உடனடியாக முருகதாஸை மீட்க நடவடிக்கைகளில் இயக்குநர்கள் சங்கம் இறங்கியது.
இந் நிலையில் சேலம் போலீஸாருக்கு முக்கிய இடத்திலிருந்து தகவல் வந்தது. இதையடுத்து ஜீப்பை கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு போலீஸார் திருப்பினர்.
அங்கு வைத்து முருகதாஸிடம் விசாரணைக்கு ஆஜராக வருமாறு கூறி சம்மனைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
முருகதாஸ் அடிக்காத குறையாக இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை எழுத்தியுள்ளது.
இந்த விவாகரத்தைக் கையில் எடுத்துள்ள தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை வலியுறுத்தி போராட்டத்தில் குதிப்பது என முடிவு செய்தது.
இந் நிலையில், சேலம் சரக டிஐஜி செண்பகராமன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையின் இறுதியில், முருகதாஸிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications