பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை
சென்னை: பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
எழுத்தாளர் சுஜாதாவின் மறைவினால் தமிழ் எழுத்துலகம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இன்னொரு பெரும் அதிர்ச்சியாக பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் 67 வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி வந்துள்ளது.
ராம் மோகன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்டெல்லா புரூஸ் இளமை ததும்பும் பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். சுஜாதாவைப் போலவே இவரது எழுத்துக்களிலும் இயல்பும், இளமையும் நளினமாக நடைபோடும்.
67 வயதான ஸ்டெல்லா புரூஸ், சமீப காலமாக வறுமையில் வாடி வந்தார். கோடம்போக்கம் யுனைட்டெட் இந்தியா காலனியில் தனது மனைவியுடன் அவர் வசித்து வந்தார். சமீபத்தில்தான் ஸ்டெல்லா புரூஸின் மனைவி மரணமடைந்தார்.
மனைவியின் இழப்பு ஒரு பக்கம் இருக்க, வறுமை மறுபக்கம் இறுக்க, துயர வாழ்க்கை வாழ்ந்து வந்த எழுத்தாளர் புரூஸ் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை அவரது வீட்டுக்கு வேலைக்காரப் பெண் வந்துள்ளார். அவரது அறையை அவர் திறந்து பார்த்தபோது மின்விசிறியில் ஸ்டெல்லா புரூஸின் உயிரற்ற உடல் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்டெல்லா புரூஸ் தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், மனைவியின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.
ஸ்டெல்லா புரூஸ் 90களில் மிகப் பிரபலமான எழுத்தாளராக விளங்கியவர். அவரது கதைகள் இடம் பெறாத இதழ்களே இல்லை எனும் அளவுக்கு ஏராளமான கதைகளையும், நாவல்களையும், கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
அது ஒரு கனாக்காலம், எல்லாச் சாலைகளும் குற்றங்களை நோக்கி, அது நிலாக்கலாம் என அவரது நாவல்கள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை வசீகரித்தவை.












Click it and Unblock the Notifications