செங்கோட்டை நகர திமுக தேர்தலில் மோதல், வேட்பு மனு கிழிப்பு
செங்கோட்டை: செங்கோட்டை நகர திமுக வார்டு தேர்தலில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் தேர்தலை ரத்து செய்து வி்ட்டு திமுக நிர்வாகி ஓட்டம் பிடித்தார்.
செங்கோட்டை நகரத்திலுள்ள 24 வார்டுகளுக்கும் திமுக பொறுப்பாளர் தேர்தல் வேட்பு மனு பெறுப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1-16 வார்டுகளுக்கு பூத்தார் கோவிலிலும், 17-24 வார்டுகளுக்கு தாலுகா அலுவலகம் அருகில் உள்ள முத்தூட் வங்கி மாடியிலும் தேர்தல் ஆணையாளராக சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக துணை தலைவரும் நகர செயலாளருமான சங்கர் தலைமையில் வேட்பு மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேட்பு மனுத்தாக்கல் தொடக்கத்திலேயே திமுகவைச் சேர்ந்த ராமையா என்பவர் திமுக தொண்டர் வேம்பு என்பவரை தாக்கியதால் கடும் மோதல் ஏற்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். செங்கோட்டையில் திமுக 3 கோஷ்டிகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் 17-24 வார்டுகளுக்கு வேட்பு வாங்கப்படுவதாக தகவல் வரவே ஒரு கூட்டம் அங்கு போய் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் வேட்பு மனுக்கள் கிழித்து எறியப்பட்டு,
தேர்தல் ஆணையர் பெட்டி பறிக்கப்பட்டது.
நகர்மன்ற தலைவரும், நகரச் செயலாளருமான ரகீம், கவுன்சிலர் பஞ்ச்பீர், திமுக பிரமுகர் வேல்சாமி உட்பட திமுகவினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அடித்துக் கொண்டு உருண்டனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையாளர் தேர்தலை ஒத்தி வைத்துவிட்டு ஓட்டம் பிடித்தார். திமுகவினருக்கிடையே நடக்கும் இந்த மோதல் மக்களுக்கு நல்ல வேடிக்கையாக அமைந்தது.