புலிகளுக்காக கேரளாவில் கட்டப்பட்டு வந்த படகு பறிமுதல்
கொச்சி: விடுதலைப் புலிகளுக்காக கேரளாவில் கட்டப்பட்டு வந்த பெரிய இயந்திரப் படகை தமிழக கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சமீபத்தில் திருச்சியில் இலங்கைத் தமிழரான பிரேம்ராஜ் உள்ளிட்ட இருவர் பிடிபட்டனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் இருவருக்கும் கடற்புலிகள் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பரத்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள முனம்பம் என்ற இடத்திற்கு விரைந்தது.
அங்கு சுதா படகு கட்டும் இடத்திற்குச் சென்ற தமிழக போலீஸ் குழு அங்கு கட்டப்பட்டு வந்த படகைப் பறிமுதல் செய்தது. இந்தப் படகு விடுதலைப் புலிகளுக்காக கட்டப்பட்டு வந்ததாகும்.
படகு என்று கூறப்பட்டாலும் கூட இது சிறிய கப்பல் போல பிரமாண்டமாக உள்ளது. கட்டப்பட்டு முடியும் தருவாயில் அந்தப் படகு இருந்தது.
இந்தப் படகு கட்டும் நிறுவனத்தை இஸ்மாயில், கோயா, முரளி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஊழியரான ஜோசப் பென்னி என்பவர் இதுகுறித்துக் கூறுகையில் கோயா, முரளி சொல்லித்தான் இந்தப் படகை கட்டி வந்தோம். இது விடுதலைப் புலிகளுக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது என்றார் அவர்.
இந்தப் படகை கட்டுவதற்காக ரூ. 50 ஆயிரம் முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
படகைக் கைப்பற்றிய தமிழக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடும் கெடுபிடிகள் நிலவுவதால், தங்களது செயல்பாடுகளை கேரளாவுக்கு புலிகள் மாற்றி விட்டதாக சமீப காலமாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் இதை கேரள அரசு மறுத்து வந்தது. ஆனால் தற்போது பெரிய அளவிலான படகு ஒன்று புலிகளுக்காக கட்டப்பட்டு வந்துள்ள தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.