இந்தியாவில் 24 கோடி பேரிடம் செல்போன்கள்

மும்பையில் நடந்த 6வது சர்வதேச தகவல் தொடர்பு மாநாட்டில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சமீப காலமாக இந்தியாவில் செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் சீனாவை இந்தியா படு வேகமாக ஓவர்டேக் செய்துள்ளது.
இந்திய செல்போன் சந்தாதாரர்கள் குறித்து ஹெக்ஸவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் அதுல் நிஷார் கூறுகையில்,
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1.38 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை 24.2 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஜனவரி மாதம் மட்டும் புதிதாக 87.7 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியா, சீனாவை முந்தியுள்ளது. 2012ம் ஆண்டில் இந்தியாவில் 49 கோடி சந்தாதாரர்கள் இருப்பார்கள்.
செல்போன் வீச்சு அதிகமாக இருந்தபோதிலும், பிராட்பேண்ட் பரவல் படு மெதுவாக இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு பிரச்சினைகள் இன்னும் நிலவுவதால் பிராட்பேண்ட் சேவையில் சுணக்கம் காணப்படுகிறது. இந்தியாவில் தற்போது 32.4 லட்சம் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள்தான் உள்ளனர் என்றார் அவர்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சுமித் செளத்ரி கூறுகையில், கடலுக்கடியில் செல்லும் கேபிள்களை மட்டுமே நம்பி பிராட்பேண்ட் சேவையைத் தர வேண்டியுள்ளது. இதனால் அதிக அளவில் சேவையை தர முடியில்லை. இதில் அடிக்கடி பைபர் கேபிள்கள் துண்டிக்கப்படுவதால் இணைப்பு துண்டிக்கப்படுவதும் நடக்கிறது.
பைபர் ஆப்டிக் வைமேக்ஸ் இதற்கு மாற்றாக அமையக் கூடும். ஆனால் அதற்கு நிறைய செலவாகிறது. வைமாக்ஸ் தொழில்நுட்ப சேவைக்கு அரசு அதிக அளவிலான கவனம் செலுத்தி முன்னுரிமை தர வேண்டும்.
அடுத்த 2 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் புதிதாக 40 ஆயிரம் சிக்னல் டவர்களை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும். காரணம், எங்களது முதல் 9000 டவர்களை நிறுவ எங்களுக்கு 6 ஆண்டுகள் பிடித்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரிலையன்ஸ் வேர்ல்ட் கிளைகளின் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட இரட்டிப்பாகும்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிக் டிவி டிடிஎச் சேவை தொடங்கிய பின்னர் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சேவை மேலும் முக்கியத்துவம் பெறும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications