கெடு விதிப்பதா- ராமதாசுக்கு வீரமணி கண்டனம்
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாமகவை திமுக புறக்கணிப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறுவது உண்மையல்ல.
காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இருப்பதாக ராமதாஸ் கூறுகிறார். காங்கிரஸ் கூட்டணி என்று தனியாக ஏதும் தமிழகத்தில் கிடையாது. கூட்டணி பற்றி ராமதாஸ் குழப்புகிறார்.
திமுகவை மைனாரிட்டி அரசு என கூறுபவர்கள் ஜெயலலிதாவும், ராமதாசும் தான். அப்படி பேசியவர் இன்று திமுகவுக்கு உள்ள ஒரு எம்.பி பதவியையும் கேட்கிறார்.
முழுமையாக கூட்டணியில் இருந்தால் உரிமையோடு பதவி கேட்கலாம். ஆனால் கூட்டணிக்கு கெடு' விதிக்கும் ராமதாஸ் எம்.பி. பதவி கேட்பது நியாயமா, இல்லையா என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
இவர் எத்தனை முறை கூட்டணி மாறியவர் என்பதும் மக்களுக்கு தெரியும்.
சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்களால் கட்டப்பட்டது. இது தீட்சிதர்களின் சொந்த சொத்து அல்ல. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தக் கோவிலை கொண்டு வரவேண்டும்.
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அறவே கடைபிடிக்கப்படவில்லை. நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு தேவை. இதை வலியுறுத்தி நாளை தி.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார் வீரமணி.
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது செய்தித் தொடர்பாளராக வீரமணி மாறிவிடுவார் என்று சமீபத்தில் ராமதாஸ் தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலடியாவே ராமதாஸை தாக்கியுள்ளார் வீரமணி.