பெண்களே இயக்கிய சென்னை டூ கொழும்பு விமானம்

இன்று உலக மகளிர் தினம். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் இன்று முற்றிலும் பெண்கள் இயக்கிய விமானத்தை சென்னையிலிருந்து கொழும்பு நகருக்கு இயக்கியது.
எல்லா துறைகளிலும் சாதனை படைக்கும் பெண்கள் பெருகி வருகின்ற காலம் இது. விமானப் போக்குவரத்தும் இதற்கு விதிவிலக்கல்ல. விமானம் ஓட்டுவதில் ஆண்களைவிட பெண்கள்தான் திறமைசாலிகள் என்று அமெரிக்க விமானப்படை நடத்திய ஆய்வு சொல்கிறது.
இந்த நிலையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் இன்று கொழும்புக்கு விசேஷ விமானத்தை இயக்கியது.
இந்த விமானத்தின் பைலட்டாக தீபாவும், இணை பைலட்டாக வேதாவும் செயல்பட்டனர். ஊழியர்களும் கூட பெண்களாகவே இடம் பெற்றிருந்தனர். இந்த விமானம் இன்று மாலை கொழும்பிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து சேரும்.
இதேபோல, ஏர் டெக்கான் நிறுவனமும், சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களிலும் இன்று பெண்கள் மட்டுமே இடம் பெற்ற சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
ஸ்பைஸ் விமான நிறுவனம் 18 வயதே ஆன ஜப்ஜி சீமா என்ற பெண் விமானியை பணியில் அமர்த்தியுள்ளது. ஜப்ஜி சண்டிகரைச் ேசர்ந்தவர்.
தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பைலட்டுகள் குறித்து ஏர் டெக்கான் நிறுவன அதிகாரி ப்ரீத்தம் பிலிப் கூறுகையில், ஏர்-டெக்கான் நிறுவனத்தில் உள்ள 496 பைலட்டுகளில் 40 பேர் பெண்கள். கேப்டன் பதவிக்கு பெண்கள் அதிகளவில் தகுதி பெற்றுவருவதால் அனைத்து மகளிர் பணிக்குழுவினர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார்.
ஏர் இந்தியா நிறுவன துணை பொது மேலாளர் ஹர்பிரீத் சிங் கூறுகையில், வெளியூர்களுக்குப் பறந்தாலும் வேலை முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்பும் வகையில் பணியிருப்பதால் உள்நாட்டு சேவையில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எங்களிடம் உள்ள 650 பைலட்டுகளில் 36 பேர் பெண்கள் என்றார்.












Click it and Unblock the Notifications