ஆசிரியர் கடத்தல் - ரவுடி சுட்டுப் பிடிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ஆசிரியரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். அவரைக் கடத்திய ரவுடிக் கும்பலைப் பிடிக்க போலீஸார் சுட்டதில் ஒரு நபர் குண்டுக் காயத்துடன் பிடிபட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. ஆசிரியரான இவர் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களையும் செய்து வருகிறார்.
வியாழக்கிழமை காலை பள்ளிக்குப் போன அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் செல்லப்பாண்டியின் செல்போனிலிருந்து அவரது மனைவி அமிர்தத்திற்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர்கள், தாங்கள் செல்லப்பாண்டியைக் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ. 20 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து போலீஸுக்கு செல்லப்பாண்டியின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். மாவட்ட எஸ்.பி. அமல்ராஜ் நேரடியாக இந்த விவகாரத்தில் களம் இறங்கினார். அவர் கூறியபடி கடத்தல்காரர்களிடம் பேசிய செல்லப்பாண்டியின் மனைவி பணத்தைக் கொடுத்து விடுவதாகவும், எங்கு வர வேண்டும் என்றும் கேட்டார்.
இதையடுத்து மயிலம் அருகே ஒரு இடத்தைக் குறிப்பிட்ட கடத்தல்காரர்கள், அங்கு பணத்துடன் வருமாறு கூறினர். இதையடுத்து அமிர்தம் தனது உறவினர்கள் சிலருடன், ரூ. 20 லட்சம் பணத்துடன் சென்றார்.
அவர்களை கடத்தல் கும்பல், அங்கு வா, இங்கு வா என அலைக்கழித்து வந்தது. பின்னர் பரிக்கல்பட்டு சாலையில், ஒரு இடத்தில் வருமாறு கூறியது கடத்தல் கும்பல். அங்கு அமிர்தம் சென்றபோது, 2 பேர் இருந்தனர். அவர்களிடம், அமிர்தம் பணப் பெட்டியைக் கொடுத்தார். அப்போது பதுங்கி வந்த எஸ்.பி. அமல்ராஜ் உள்ளிட்ட போலீஸ் படையினர் பாய்ந்து சென்று அக்கும்பலை மடக்கினர்.
இருவரையும் சரணடைய எச்சரித்தனர். ஆனால் அவர்கள் அரிவாள்களால் போலீஸாரை வெட்ட முயன்றனர். இதில் தலைமைக் காவலர் மண்ணாங்கட்டி காயமடைந்தார்.
இதையடுத்து எஸ்.பி. அமல்ராஜும், சப் இன்ஸ்பெக்டர் குமாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரமேஷ் என்ற நபர் காயமடைந்து விழுந்தார். இன்னொருவர் தப்பி ஓடி விட்டார்.
காயமடைந்து விழுந்த நபரிடம் போலீஸார் விசாரித்ததில், ஆசிரியரை ஒரு தோப்பில் வைத்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் போலீஸார் அங்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் என்ற இடத்தில் சாலையோரம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆசிரியர் செல்லப்பாண்டி கண்டுபிடிக்கப்பட்டார். கடத்தல் கும்பல் அவரை கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியிருந்தது.
அவரை போலீஸார் மீட்டு கடலூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குண்டடி பட்டு விழுந்த ரமேஷும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
செல்லப்பாண்டியைக் கடத்தியது புதுவையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற பிரபல ரவுடிக் கும்பல் என்று தெரிய வந்துள்ளது. ரமேஷ் மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் உள்ளன. ரமேஷ் பிடிபட்டபோது தப்பிய நபர் ஆறுமுகம் என்றும், அவர் மணிகண்டனின் தம்பி என்றும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் கூலிக்கு ஆட்களை கடத்துவது, மிரட்டுவது, கொலை செய்வது போன்ற பயங்கர செயல்களில் ஈடுபடும் கூலிப் படையினர் ஆவர்.
மணிகண்டன் புதுவையில் பிரபல ரவுடி, பல்வேறு கடத்தல், கொலை, கொலை முயற்சி வழக்குகள் அவன் மீது உள்ளது. மொத்தம் 11 பேர் சேர்ந்து இந்தக் கடத்தலை நடத்தியுள்ளனர். தலைமறைவாகி விட்ட மணிகண்டன், ஆறுமுகம் உள்ளிட்டோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
--












Click it and Unblock the Notifications