ராஜ்யசபா: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் ராஜ்யசபா இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 6 தமிழக ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து இந்த காலியிடங்களுக்கு வருகிற 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 15ம் தேதியாகும். 17ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 19ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். போட்டி இருந்தால் 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
இத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டசபைச் செயலாளர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் 15ம் தேதி வரை தினசரி முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் அதிகாரி அல்லது உதவித் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 9ம் தேதி மட்டும் விடுமுறை தினமாகும்.
எம்.எல்.ஏக்கள் பலம்:
மொத்தம் - 235 (ஒரு நியமன உறுப்பினர் உள்பட)
திமுக கூட்டணி - 167
திமுக - 96
காங்கிரஸ் - 35
பாமக - 18
சிபிஎம் - 9
சிபிஐ - 6
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 2
சுயேச்சை - 1
அதிமுக கூட்டணி - 66
அதிமுக - 60
மதிமுக - 6
தேமுதிக - 1
நியமன உறுப்பினர் - 1 (வாக்குரிமை கிடையாது)
சபாநாயகர் - 1
தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணிக்கு 4 எம்.பிக்களும், அதிமுக கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்கும் நிலை உள்ளது. 6வது எம்.பிக்கு போதுமான பலம் இரு கூட்டணிகளுக்கும் கிடையாது. அது 2வது ஓட்டு அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
தமிழக சட்டசபையின் ஒரே சுயேச்சை உறுப்பினர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார். தேமுதிக உறுப்பினரான விஜயகாந்த் யாருக்கும் வாக்காளிக்காமல் நடுநிலை வகிப்பார் எனத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் இன்னும் சீட் உடன்பாடு தெளிவாக முடிவாகவில்லை. பாமக பிரச்சினையை எழுப்பியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான 15ம் தேதி வரை திமுகவுக்கு அது அவகாசம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications