தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதா?-வீரமணிக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை: ராஜ்யசபா சீட் தொடர்பாக திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே நிலவும் பிரச்சினை, இரு தோழமைக் கட்சிகளுக்கு இடையிலான விவகாரம். இதில் தேவையில்லாமல் வீரமணி மூக்கை நுழைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சூடான அறிக்கையில், பாமக ஒரு ராஜ்யசபா சீட் கேட்கிறது. இதுதொடர்பாக திமுகவுடன் அரசியல் ரீதியிலான பேச்சு நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கி.வீரமணி தலையிட என்ன அவசியம் உள்ளது. அவருக்கு என்ன தகுதி உள்ளது.
பாமக மீது குற்றம் சாட்டியுள்ளதன் மூலம் கண்ணாடி வீட்டுக்குள் அமர்ந்து கல் எறிந்துள்ளார் வீரமணி.
மறுபடியும் சொல்கிறேன், தி.க ஒரு சமூக இயக்கம். அரசியல் கட்சி. அதை வீரமணி புரிந்து கொள்ள வேண்டும்.
சுய மரியாதை, மனிதாபிமானம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பரப்ப பெரியார் தோற்றுவித்த இயக்கம்தான் திராவிடர் கழகம். இந்த கருத்துக்களின் அடிப்படையில் எனக்கும், கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பிரச்சினை ஏற்பட்டால் வீரமணி தலையிடலாம். அதில் தவறில்லை.
ஆனால் இரு அரசியல் கட்சிகளுக்கிடையிலான, அரசியல் பிரச்சினையில், அவர் தலையிடுவது தவறு. யார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும் அவர்களது ஏஜென்டாக, ஊதுகுழலாக செயல்படுபவர் வீரமணி. அவருக்கு பாமக விவகாரத்தில் தலையிட உரிமை இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை இனியாவது அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தனது எல்லையைத் தாண்டி செயல்படுகிறார் வீரமணி. இது தேவையற்றது, அநாவசியமானது. இதன் மூலம் பெரியாரின் கொள்கைளுக்கும், அவர் தோற்றுவித்த இயக்கத்திற்கும் அவர் துரோகம் இழைத்தவராகிறார் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications