ராஜ்யசபா தேர்தல்-பாமகவுடன் காங். பேச்சு
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தாங்கள் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்குமாறு பாமகவிடம் காங்கிரஸ் தலைமை கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக தரப்பில் காங்கிரசுக்கு 2, தனக்கு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது. பாமகவுக்கு சீட் இல்லை என திட்டவட்டமாகக் கூறிவிட்டது திமுக.
இந் நிலையில் ஓட்டளிக்காமல் புறக்கணிக்கலாமா அல்லது நாமே போட்டி வேட்பாளரை நிறுத்தலாமா என்ற யோசனையில் உள்ளது பாமக.
திமுகவைப் பொறுத்தவரை அக் கட்சியிடம் 96 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் தான் நிறுத்தும் இரு வேட்பாளர்களையும் அக் கட்சியால் எளிதாக வெல்ல வைத்துவிட முடியும்.
ஆனால், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்குத் தான் சிக்கல் ஏற்படும்.
திமுக தனது உபரி வாக்குகளை மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஒதுக்கிவிட்டு, பாமகவிடம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரலாம்.
அப்படிப்பட்ட சூழலில் காங்கிரசின் 2வது வேட்பாளர் வெல்ல பாமகவின் ஆதரவு நிச்சயம் தேவை. அதே நேரத்தில் மத்தியில் அன்புமணி அமைச்சராக தொடர காங்கிரசின் தயவு தேவை.
எனவே இந்த இரு கட்சிகளையும் 'கோர்த்துவிட்டு' திமுகாவால் வேடிக்கை பார்க்க முடியும். அதைத் தான் திமுக செய்யப் போகிறது என்பதை பாமகவும் உணர்ந்துள்ளதால் அந்தத் தரப்பில் பெரும் எரிச்சல் நிலவுகிறது.
இந் நிலையில் தனது வேட்பாளர்கள் வெல்ல உதவுமாறு பாமகவிடம் காங்கிரஸ் தலைமை கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸை பகைத்துக் கொள்ளாமல் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு பாமக தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே காங்கிரசில் எம்பி பதவியைப் பிடிக்க கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு இடம் ஜி.கே.வாசனுக்கு என்பது உறுதியாகிவிட்டது.
இன்னொரு இடத்தைப் பிடிக்க ஜெயந்தி நடராஜனில் ஆரம்பித்து பலரும் டெல்லியில் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications