திமுக தேர்தலில் அடிதடி-தேர்தல் அதிகாரி கார் உடைப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக கிளைக் கழகத் தேர்தலில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் திமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்தக் கலவரத்தில் தேர்தல் அதிகாரியின் கார் உடைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரையன்விளை கிளைக் கழக தேர்தலில் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நாகர்கோவில் திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் அங்கு வந்தார்.
அப்போது இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாம்பன் விளையை சேர்ந்த சுயம்பு, ஈத்தாமொழியை சேர்ந்த கணேசன், புல்லுவிளையை பாபு, வில்சன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதில் தேர்தல் அதிகாரியான ராமகிருஷ்ணன் காரும் உடைக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சமாதானம் செய்தனர்.
இது குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை. அதே போல போலீசாரும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.